வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பறையர்கள் பூர்வகுடிகளா? வந்தேறிகளா?

சென்ற பதிவில் திராவிடர்கள் வந்தேறிகள் அவர்கள் பூர்வகுடிகளான பறையர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்ற ஸ்டான்லி கருத்தை பார்த்தோம். இந்த பதிவில் பறையர்களும் வந்தேறிகளாக இருப்பதற்கான காரணங்களை ஆய்வோம்.

தீண்டாமையை பற்றி பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன/மறைக்கபடுகின்றன. அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. யாரையோ காப்பாற்ற இது நடக்கின்றது. சில நேரங்களில் உண்மை கசக்கும். அதனால் அதை மறைக்க முயலுகின்றனர்.  தீண்டாமை பற்றிய ஆதி காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்தால் அதை அழித்து விட வேண்டும் என்று  கல்வெட்டு துறைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி காலம் காலமாக தீண்டாமை பற்றிய கல்வெட்டுக்கள் அழிக்கப்படுகின்றன.


இந்த பதிவில் ஒரு ஆதாரமற்ற கருத்தை முன் வைக்கிறேன். இதுவரை இவ்வாறு யாரும் சிந்தித்துள்ளார்களா இது சரியா தவறா என்றுகூட எனக்கு தெரியாது. ஆனால் இவ்வாறு இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதே அது.

மனுநீதியில் ஒரு வாசகம் வருகிறது. வர்ணங்கள் என்பது நான்குதான் ஐந்தாவது வர்ணத்திற்கு இடமில்லை என்பதுபோல ஒரு வாசகம்.

மனுநீதி இங்கு யாரோ சிலரை தன்னுடைய சட்ட புத்தகத்தில் அங்கீகரிக்க மறுக்கிறது. அது பறையர்களா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் இவர்கள் நான்கு வர்ணங்களுக்குள்ளும் வரவில்லை. எனவே இது அவர்களை பற்றியதாக இருக்கலாம் என்று யோசிக்க வேண்டியதுள்ளது.

மனுநீதி ஆரியர்களால் எழுதப்பட்டது எனில் அவர்கள்  வந்தேறிகளான திராவிடர்களை மட்டும்  அங்கீகரித்துவிட்டு  பூர்வகுடிகளான  பறையர்களை  அங்கீகரிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த இடத்தில் இந்த நிலத்திற்கு அந்நியமானவர்களாக அவர்கள் இருக்க கூடும்.


இப்பொழுது சென்னையிலும் மேலும் பல பெரிய நகரங்களிலும்  நாம் காண்பது என்னவெனில் வேலைக்கு வெளியூரிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து பலரும் வருகின்றனர். இவர்களில் நிறைய பணம் உள்ளோர் வசதியாக நகரத்தின் மத்தியில் வாடகை வீட்டிலும்,பணம் இல்லாத ஏழைகள் தனியாக ஒதுக்குபுறமாக தங்கி அது ஒரு காலனியாக மாறிவிடுகிறது.

அந்த காலத்திலும் செழிப்புற்ற இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து மக்கள் பிழைப்புக்காக வந்திருக்க கூடும். அவர்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக தங்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நீங்கள் பார்க்கலாம் பறையர்ககளுக்கு என்று தனியாக ஒதுக்குபுறமாக ஒரு தெரு இருக்கும். அங்குதான் அவர்கள் வசிப்பிடம்.

எனவே இன்றைய பறையர்கள் ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து அல்லது வெளியிடங்களிலிருந்து வேலை செய்ய இங்கு வந்திருக்கலாம். இங்குள்ளவர்களுக்கு வேலை செய்ய ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்கு என்று தங்க ஒதுக்குபுறமாக தங்க இடமளித்திருக்கலாம்.

இல்லை அவர்கள் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள்தான் அவர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்று ஸ்டான்லி என்னோடு வாதிடலாம். அடிமை படுத்தி இருந்தால் அவர்கள் ஒன்று திரண்டு திராவிடர்களுடன் சண்டையிட்டு இவர்களுக்கு என்று ஒரு நிலத்தை கைப்பற்றி இருக்கலாம். அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை (அல்லது ஆவணப்படுத்தப்படவில்லையா?).  மேலும்  பறையர்கள் ஏன்  இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கு புறத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் திராவிடர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர்களை சண்டையிட்டு ஒதுக்குபுறமாக தங்கவைத்து விட்டார்களா?


ஒவ்வொரு ஊரிலும் ஒரு பறையர் தெரு உள்ளது இது அடிமைப்படுத்தப்பட்டு ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டா அல்லது அவர்களாகவே ஏற்றுக்கொண்டு அவ்வாறு தங்கிவிட்டார்களா என்று சிந்திக்க வேண்டும்.  அவர்கள் பூர்வகுடிகளாகவே இருந்தாலும் அடிமைபடுத்தித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமல்ல. மாறாக வசதியில்  ஒரு கூட்டத்தினர் முன்னேறும் மொழுது ஒரு சிலர் தானாகவே பின்தங்கிவிடுவதுண்டு. அவ்வாறு கூட அவர்கள் பின்தங்கி இருக்கலாம்.

இங்கு நான் கூற வருவது என்னவெனில் இன்று  பறையர் (தீண்டாமைக்கு உள்ளானவர்கள்) என்பவர்கள் அக்கால ஏழை மக்களே. அவர்களில் சிலர் பூர்வகுடிகளாகவும் சிலர் பிழைப்புக்காக வந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அனைவரயும் அடிமைபடுத்தித்தான் வைத்திருந்தார்கள் என்பதைவிட அது ஏழை பணக்காரன் என்ற  வித்தியாசத்தால் உருவாகியிருக்கவேண்டும்.

இன்றும் பெரு  நகரங்களில் காலனி உருவாவது இந்த இரண்டுமுறையில் தான். அதாவது அந்த ஊரில் உள்ளவர்கள் கல்வியிலும் வசதியிலும் பின் தங்குவதால் தனித்து விடப்படுவது மறுபுறம் வெளியூரிலிருந்து வரும் ஏழைகளும் வசதியின்மையால் காலனியில் குடியேறுவது. இதில் மூன்றாவது ஒரு காரணமும் இருக்க வாய்ப்புண்டு. அது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.


 வரலாற்றின் படியும் பரிணாமத்தின் அடிப்படையிலும் பூர்வகுடிகள் என்று யாரையும் கூற முடியாது. ஏன் ஏனில் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்துள்ளோம். எல்லோரும் ஒரே இடத்திலேதான் தோன்றியுள்ளோம். அது கிழக்கு ஆப்ரிக்கா என்று அறிவியலும் லெமூரியா கண்டம் என்று தமிழ்சார் அறிஞர்களும் கூறுகின்றனர்.

இவர்கள்  பூர்வகுடிகள் இவர்கள் வந்தேறிகள் என்பது என்னைப்பொருத்தவரை எந்த ஒரு இனத்திற்கும் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் பொருந்தாது. வேண்டும் என்றால் முதலில் குடியேறிவர்கள் என கூறி கொள்ளலாம். அப்படியே இருந்தாலும் ஒருவனுக்கு ஒருவன் சொந்தக்காரன் தானே? எந்த நிலப்பகுதியும் யாருக்கும் சொந்தம் இல்லையே?


குறிப்பு: இப்பதிவில் பறையர் என்பதை ஒரு சாதியை மட்டும் குறிக்காமல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த மக்களை குறிக்க பயன்படுத்தியுள்ளேன். தீண்டாமைக்கான சில காரணங்களை இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.  இப்பதிவின் நோக்கம் உண்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றுணர வேண்டும் என்பதே.  சாதியை ஒழிக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எந்த ஒரு காரணத்திற்காகவும் சாதியை காட்டி காக்க அனுமதிக்க கூடாது, இட ஒதுக்கீடு உட்பட. அது  நம்மிடையே பிரிவினையையும் மோதலையும்  உண்டாக்குமே தவிர ஒற்றுமையை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...