ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மதம் மனிதனுக்கா யானைக்கா? கும்கி


யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.

காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு  பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?

 ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா?  என்பதை திரையில் பார்க்கவும்.

படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
 நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை. 

பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கம் நன்று.  நாயகனை யானையில்  அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.

இயல்பான,அருமையான  படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

மனிதனுக்கு எந்த மதம்  பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும்  தீமையையே தருகிறது.

பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத்  தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமல் என்ன முட்டாளா?

திரைத்துறையில் புத்திசாலியாக கருதப்படும் கமலின் அடுத்த திட்டம் வீட்டுக்குள் திரைப்படம். கமலின் திரைப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடும் திட்டம் சில பல   எதிர்ப்புகளையும்,ஆதரவையும் பெற்றுள்ளது.


திட்டம்: திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு DTH (நேரடி தொலைகாட்சி?)  யில் படத்தை வெளியிடுவது.

நன்மைகள்:
1. ஒரே நேரத்தில் பலரையும் படம் பார்க்க வைக்கலாம்.
2. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் பார்ப்பதால் படம் நன்றாக இல்லையென்றாலும் லாபத்தை ஈட்டிவிடும். (எதிர்காலத்தில்) இதுதான் இந்தத்தொழில்நுட்ப்பத்தின் மிகச்சிறந்த  வரப்பிரசாதம்,குர்பானி,அப்பம் :)
4.முதல் காட்சியை பெரும்பாலும் பெண்களால் பார்க்கமுடிவதில்லை. இனி பெண்களும் முதல் காட்சியை பார்க்கலாம்.

தீமைகள்:
1.எதிர்காலத்தில் திரையரங்கத்தொழில் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் முதலில் படம் பார்க்கலாம் என்றால் நமது தீவிர ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
2.திருட்டு vcdக்கள் நிறைய உருவாகும். தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இதை வாங்க மாட்டார்கள்.
3. சிலர்  படத்தை பதிவு செய்து youtube இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு vcd,youtube பிரச்சனைகளை தவிர்க்கலாம்)

நன்மையா தீமையா?
1. (எதிர்காலத்தில்)இனி நடிகர்களுக்கு பாலபிஷேகம்,பீரபிஷேகம் இருக்காது :)
2.ரசிகர் மன்றம் கலையிழக்கும்.


திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது:
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரு தொழிலை பாதிக்கவே செய்யும். தொழில்நுட்பத்திற்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இன்று தெருக்கூத்து என்பது அழிந்துவிட்டது. இதற்க்கு காரணம்  திரைப்படங்களும் திரையரங்குகளும் தான். அதுபோலத்தான் இதுவும். 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வையுங்கள்.

திரையரங்குகளும் பாதிக்காமல்,இம்முறையையும் செயல்படுத்த கமல் என்ன செய்யலாம்?
எட்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்கட்சியில் ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் திரையரங்கிலும் நேரடித்தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
 இதானால் இருதரப்பும் பயனடையும். இந்த நிலையில் நமது ரசிகர்கள் திரையரங்கிலும், பொது மக்கள் (பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள்) நேரடித் தொலைக்காட்சியிலும்  படம் பார்பார்கள். 
நேரடித்தொலைக்கட்சி கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.நேரடித்தொலைகாட்சி வசதியில்லாதவர்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்த முறையால் திரைத்துறை மேலும் வளர்ச்சியை சந்திக்கும்.

நேரடித் தொலைக்காட்சியின் மூலம் இனி நேரடித் திரைப்படம்  கண்டுமகிழுங்கள் :)

இது ஒரு சோதனை மறுபதிவு