வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 26 ஏப்ரல், 2012

இசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?



சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள்  மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில்  இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை  முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை  (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்)  அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம். 

அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது. 

அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.   

இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை  இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம். 

அந்தபதிவில் பெண்கல்வியையும்  இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா   என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால்  அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள்  அடங்கிய தாளை அவரிடம் தருகிறார்.  ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha." அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை  திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.

 பண்டைய இந்தியாவில்  பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு. 

அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல  இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம்.  பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம். 

இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது.  இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன். 

ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள்  ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். 
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில்  யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. 

இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள்.  இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று  கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.

அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்)  நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால்  உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் .  முடிவு உங்கள் கையில். 

வியாழன், 19 ஏப்ரல், 2012

இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?



இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?

நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை :) , சிந்து நதியோரம் வசித்தவர்களை ,  அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில்  இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள  மக்களையும்  குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம். 

சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில்  இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து.  அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின்  பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய  வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.

இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது  இப்படித்தான்.

சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும்  வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு  முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு  முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது. 

இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய  பிராமண மதவாதிகள்  போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன்  :) )

1.  வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர் 
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு  இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.

இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.

பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக  குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு  பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.

தொடரும்......................
தமிழர்களின் நிலையையும் , இந்து மதத்திற்கு இலக்கணத்தையும் அடுத்த பதிவில் காண்போம் 

புதன், 4 ஏப்ரல், 2012

சமணமே உன்னை என்னவென்று சொல்ல?


உலக உயிர்களுக்கு   துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் உன்னத மதம் சமணம். பல மனிதர்கள் ஆடு, மாடு,கோழி.பன்றி,மீன் என்று சாப்பிடும் பொழுது வெங்காயத்தையும், பூண்டையும் கூட சாப்பிடகூடாது என்று கூறும் மதம் சமணம். (வெங்காயம், பூண்டு போன்றவற்றை பிடுங்குவதன் மூலம் அது கொல்லப்படுகிறது ஆதலால் அதை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். )

இன்றுவரை காட்டுமிராண்டியாக வாழும் மனிதனை கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட அறுநூறு முதல் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மனிதனை  தெய்வமாக்க முயற்சி செய்த மதம் சமணம். 

ஒரு காலத்தில் மாட்டுகறியை உண்ட  பிராமணர்களை சைவம் பக்கம் திரும்ப வைத்தது சமணம். 

இன்றும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்கள் அடித்து கொண்டு சாகும் பொழுது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உயிர்களையும்  தம்முயிர் போல் கருதி  துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறிய மதத்தை என்னவென்று புகழ்வது?

மனிதர்களை கொன்று மதத்தை வளர்த்த மதங்கள் இன்று நம்மிடையே இருக்க, மனிதனை இறைவனாக்க  முயன்ற மதம் செல்வாக்கு இழந்தது ஏனோ? 

ஒரு இறைவனா பல பல இறைவனா  என்று இன்றும்  அடித்து கொள்ளும் பொழுது இறைவனை பொருட்படுத்தாத மதத்தை என்னவென்று புகழ்வது?

நல்ல கொள்கைகள் பல தந்த சமண மத துறவி மகாவீர் அவர்களின் பிறந்த நாளை உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டாமா? குறைந்த பட்சம் அவரை மனதில் வைத்து பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ முயற்சி செய்வோம். உயிர்களை நேசிக்க மதம் ஒரு தடை என்றால் நாம் மனிதர்களா மிருகங்களா?

குறிப்பு: இப்பதிவானது நான் ஏற்க்கனவே படித்த, கேள்வி பட்ட விடயங்களை  வைத்து எழுதியது. இதில் எதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அதற்கு மட்டும் ஆதாரத்தை தேடி தருகிறேன்.
மேலும் படிக்க :http://en.wikipedia.org/wiki/Jainism

Related Posts Plugin for WordPress, Blogger...