வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 29 ஜூன், 2011

இவர்கள் பகுத்தறிவாளர்களா?


கல்லை செதுக்கி
அதற்கு சாமி என்று பெயரிட்டு
மாலை அணிவித்து வணங்கினால்
அது மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பார்கள் பகுத்தறிவாளர்கள் (எ) நாத்திகவாதிகள்.

ஆனால் அவர்களோ
கல்லை செதுக்கி
அதற்கு பெரியார் என பெயரிட்டு
மாலை இட்டு வணங்கி  மரியாதை செய்வர்
இவர்களின் பகுத்தறிவை  என்ன சொல்ல?

குறிப்பு: பகுத்தறிவாளர்களின் மத்தியிலும் மூடத்தனம்  உண்டு என்பதை  சுட்டி காட்டுவதற்கே இதை எழுதியுள்ளேன். எனக்கும் பகுத்தறிவில் நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் பெயருக்கு பெண்ணால் ஜாதி இடம் பெறுவதில்லை. இது பெரியாரின் சாதனை தான். சிந்திக்கத் தெரிந்தவர்கள்  சிந்திக்கட்டும்.


திங்கள், 27 ஜூன், 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?

பிரபஞ்சம்  எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளது. இன்னும் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே நான் என்ன புதிதாக சொல்ல போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் எனில் இங்கே அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல இந்த பாலத்தின் மூலம் எனக்கு தெரிந்த, நான் உணர்ந்த, பிரபஞ்ச ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

முதலில் ஆன்மிகம்  மற்றும் அறிவியல்  என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்மிகம் என்பது நேற்றைய அறிவியல் அவ்வளவுதான்.

ஆன்மிகம் என்பது அகத்தாய்வு செய்தல்.  அறிவியல் என்பது புறத்தாய்வு செய்தல்.

இங்கே ஆன்மிகம் என்ற வார்த்தை கூட சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அகத்தாய்வு செய்தல் என்ற வார்த்தையை  இங்கே வைத்து கொள்வோம்.

அறிவியல் எனபது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். புறபொருள்களில் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது தான் அறிவியல். அதாவது  வெளியில் இருக்கும்  சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளி இங்கே  விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து  ஆராய்ச்சி செய்வார்கள்.(நிலம், கடல் இவையும் இந்த ஆராய்ச்சிக்கு உதவுகிறது)  இது அறிவியல் மூலமாக புறத்தாய்வு செய்து உலகம் எப்படி தோன்றியது என்ற முடிவுக்கு வருதல்.


அது என்ன அகத்தாய்வு? ஏன் அதை செய்ய வேண்டும்?
தவம் தியானம் இதைத்தான் அகத்தாய்வு  என்கிறோம்.  இங்கே நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். அறிவியலில் பார்வையை வெளியில் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.

அதாவது  உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம்  ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை  பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை  மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம்.

அட பிரபஞ்சம் என்பது வெளியில் தானே உள்ளது அதை அறிவியல் முறையில் வெளியில் ஆய்வு செய்வதுதானே சிறந்தது என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கேள்வி நியாமானது தான். ஆனால் அவர்களுக்கு உடலை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.

இந்த பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ  அது மனிதனின் உடலிலும்  உள்ளது.  இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும்.
வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் கூட நமது உடம்பில் உள்ளதாக மெய்ஞானிகள்   கூறுவர். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பது அவர்கள் கூற்று.

அகத்தாய்வு பற்றி படித்தவர்களுக்கு நன்று தெரியும் மனிதன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும் என்று.
ஒரு கடவுளால் எதுவெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களோ அதுவெல்லாம் மனிதனாலும் முடியும். (போலி சாமியார்களை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளதீர்கள்).
நீங்கள் என்ன நினைத்தாலும் அதை கூறும் சக்தியை ஒரு மனிதானால் பெற முடியும். நினைத்த நேரத்தில் ஓரிடத்தில் மழை பொழிய வைக்க முடியும். பறக்க முடியும், எங்கிருந்தும் எதையும் யாரையும் பார்க்க முடியும், உடலை  மலை போல் ஆக்க முடியும், உடலை அணு போலவும் மாற்ற முடியும், உயிரற்ற  உடலை தன்னுடலாக மாற்றிக்கொள்ள முடியும். (இவற்றை உண்மையான மெய் ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, இவையாவும் ஒரு கழிவுப்பொருள் போலத்தான்) 

பிரபஞ்சம் முழவதும் சுற்றி வரவும் முடியும்.   பிரபஞ்சத்தை சுற்றி வர தெரிந்தவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்று தெரியாதா என்ன.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்களும் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம். விஞ்ஞானியாக அல்ல மெய்ஞானியாக

தொடரும்.........................

திங்கள், 20 ஜூன், 2011

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்

 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.



ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது. 
 

புதன், 15 ஜூன், 2011

முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?

முற்பிறவி என்றால் முந்தைய பிறவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது மூன்றாவது பிறவியையும் குறிக்கும். (என்னோட அகராதியில :) )

ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து  மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர்.  என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.

இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். 

ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின்  மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.

முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து   ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள். 

இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.
சென்ற பிறவிக்கு முன்பிறவியில் செய்த பாவம் புண்ணியமும் ஒருவனுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை  தீர்மானிக்கின்றது என நினைக்கின்றேன். ஆதலால் தான் ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம்    என்று சொனார்கள். அதாவது ஒருவனுக்கு கிடைக்கப் போகும் சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டை பொறுத்தே அமையும்.
தந்தை, குரு, அதிஷ்டம் , பரம்பரை சொத்து இவற்றை  ஒன்பதாம் வீடு குறிக்கின்றது.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)

ஆதலால் தான் நம் பெரியோர்கள் முற்பிறவியில் செய்த பலனால் குழந்தை செல்வம் என்று கூறியுள்ளனர். இந்த முற்பிறவியை ஐந்தாம் வீடு மற்றும் அதற்கு முந்தைய பிறவியை ஒன்பதாம் வீடு குறிக்கின்றன.
ஆதலால் முற்பிறவி எனபது மூன்றாவது பிறவியையும் தானே குறிக்கின்றது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முந்தைய அனைத்து பிறவியையும் குறிக்கும் வார்த்தை தான்.

ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான்.
 
குழந்தை இல்லாதவர்கள் இதை படித்து விட்டு நொந்து கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாததும் ஒருவிதத்தில் நன்மையே....... உங்கள் ஆன்மீக (தவ)  பயணத்திற்கு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவம் உங்களுக்கு கை கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு  குழந்தையை தத்தெடுத்து வளருங்கள்.

முடிந்த வரை இப்பிறவியில்  நன்மை செய்யுங்கள்....நன்மை இப்பிறவியிலும் கிடைக்கலாம்....அடுத்த பிறவியிலும் கிடைக்கலாம்.... ஏன் பிறவியே இல்லாமலும் போகலாம்.
வாழ்க வளமுடன்....நலமுடன்....

ஞாயிறு, 12 ஜூன், 2011

எங்கே போனது மனிதம்?

ஒரு தமிழன் தாக்கப் பட்டால் தமிழன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டால் முஸ்லீம் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு கிறிஸ்டியன் தாக்கப்பட்டால் கிறிஸ்டியன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு இந்து தாக்கப்பட்டால் இந்து மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?

ஒரு ஜாதிக்காரன், ஒரு இனத்துக்காரன், ஒரு மதத்துக்காரன் தாக்கப்பட்டால் அதை சார்ந்தவர்கள் மட்டுமே அதற்கு குரல் கொடுக்க வேண்டுமா? ஏன் மற்றவர்கள் அதற்கு குரல் கொடுப்பதில்லை?
நாம் அனைவரும் நம்மை ஒரு வட்டத்துக்கள் அடைத்துக்கொண்டது தான் காரணம்.
குறைந்த பட்சம் இவர்களாவது ஏதோ ஒரு காரணத்தினால் குரல் கொடுக்கிறார்கள்  என்று எண்ணி மகிழ்வதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.

உண்மையில் நாம் இவர்களை நினைத்து பெருமைப்படுவதில் தவறில்லை. ஏன் எனில் இவர்களாவது அவர்களோடு ஏதோ ஒரு முறையில் சம்பந்தம் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள். பெரும்பாலானோர் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன  என்று இருக்கிறார்கள். இவர்களை  விட அவர்கள் மேல். 

யோசிக்கத் தெரிந்த அனைவரும் முதலில் என் மதம், என் இனம், என் ஜாதி, என் மதம்  என்ற  வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும்.
அவர்கள் அடுத்த வட்டத்திற்கு செல்ல வேண்டும் அந்த வட்டம் நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைக்கும் வட்டம் . முடிந்தால் நாம் அனைவரும் உயிர்கள்,இயற்கையின் அங்கம்  என்ற வட்டத்திற்குள்ளும்  செல்லலாம்.

இந்த வட்டத்திற்குள்  என்று மனிதன் செல்கின்றானோ  அன்றே மனதிலும் உலகிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அதுவரை மனிதம் எங்கே போனது  என எங்கு தேடினும் கிடைக்காது.
ஆமாம் நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்?

சுவிஸ்ல இன்னுமா பணம் இருக்கும்?

எனக்கு ஒரு சந்தேகம். இதுக்கு பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளாகவே சுவிஸ்ல இருக்கிற பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரணும், அதை நாட்டுடமையாக்கணும்  அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கு என்ன சந்தேகம்னா இன்னுமா அந்த பணம் சுவிஸ்ல இருக்கும்?.

இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா? (சுவிஸ் மாதிரி  வேறு சில வங்கிகளும் இருப்பதாக தகவல்).

அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா? (நிறைய  பண்க்காரர்களோட உறவினர்கள் வெளிநாட்டிலே செட்டில் ஆகி இருக்காங்க).

அல்லது இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம் ...அட தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்.
 நம்ம அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குமுன்னே சுவிஸ் பணம் கரைஞ்சிடும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லுங்கள் அந்த பணம் இன்னும் சுவிஸ்ல அப்படியே  இருக்கும்னு  நினைக்கிறீங்க?

திங்கள், 6 ஜூன், 2011

தன காரகன் குருவா சுக்கிரனா?

ஜோதிடத்தில் குருவை தன காரகன் என்று சொல்கிறார்கள். தனம் என்றால் செல்வம் அப்படி என்றால் காசு பணம் தானே. இதற்க்கு காரகன் குரு என்பது சரியா. எனக்கு தெரிந்த வரையிலும் கேள்விப்பட்ட வரையிலும் சுக்கிர திசை அல்லது புத்தியில் தான் அதிகமாக பணம் வருகிறது. மேலும் சுக்கிர பலம் உள்ளவர்களுக்கும் அதிகமாக பணம் வரும். அப்படி இருக்க குருவுக்கு ஏன் தன காரகன் என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.

மேலும் காலபுருஷ தத்துவப்படி இரண்டாம்  வீடான ரிஷபத்திற்கு  சுக்கிர பகவான் தான்  அதிபதி. இங்கே சந்திரன் உச்சம் அடைகிறார். நான் கேள்விப்பட்ட அல்லது படித்த வரையில் ஒருவனின் ஜாதகத்தில்  சுக்கிர பகவானும் சந்திரபகவானும் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும். குரு பகவானும் முக்கியமே ஏன் எனில் இவர் தங்கத்திற்கு காரகன் என்கிறார்கள். ஒருவேளை தங்கத்துக்கு மட்டும் தான் குரு பகவான்  காரகனோ?. பணத்திற்கு சுக்கிர பகவன் தான் காரகனோ?. இவருக்குரிய தெய்வம் இருக்கும் திருப்பதிக்கு  தானே செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.

என் கேள்வி சரியா...உங்களுக்கு பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


ஞாயிறு, 5 ஜூன், 2011

உடல் இளைக்க பெருக்க என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு உடல் பருமனாக உள்ளதே என்று கவலை. சிலருக்கு உடல் சிறியதாக உள்ளதே என்று கவலை.

இவர்களுக்கு நான் ஒரு சூத்திரத்தை சொல்ல போகிறேன். அதை பின் பற்றினால் நினைத்தது நடக்கும்.

இளைக்க சூத்திரம்: புளிப்பு தன்மையுள்ள பொருட்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் இளைக்கும்.

வேறு என்ன வழிகள்:
௧. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துங்கள்.
௨. உடற் பயிற்சி நடை பயற்சி செய்வதாக இருந்தால் சாப்பிட்ட பின்பு சில மணி நேரங்கள் கழித்து செய்யுங்கள்.
௩.சாப்பிடும் பொழுது பசி இருக்கும் பொழுதே நிறுத்திக் கொள்ளுங்கள். (இது ரொம்ப முக்கியம்).
௪. சாப்பிட்டு விட்டு உறங்கவோ உட்காரவோ செய்யாதீர்கள்...சிறிது நடத்தல் நலம்


பெருக்க சூத்திரம்: இனிப்பு தன்மையுள்ள பொருட்களை நிறைய உண்ணுங்கள். உடல் பெருக்கும்.

வேறு என்ன வழிகள்:
௧.உடற் பயிற்சி நடை பயிற்சிக்கு பிறகு உணவருந்துங்கள்.
௨. பசியெடுத்த பின்பு உண்ணுங்கள்.
௩. சாப்பிட்டுவிட்டு உறங்குங்கள் (உடல் பெருக்கும்.. ஆனால்  நீண்ட ஆயுளுக்கு நல்லதல்ல)

இருவருக்கும் பொது: நிறைய நீர் அருந்துங்கள்.

ஏதோ நான் நினைத்ததையும் ஏற்கனவே படித்தையும் எழுதியுள்ளேன். உங்களுக்கு சரி வந்தால் செய்யுங்கள். எதையும் அளவுக்கு மீறி உண்டால்  நஞ்சு என்பதையும் மனதில் வையுங்கள்.

சனி, 4 ஜூன், 2011

ரஜினிக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?



 இன்று காலை பாபா திரைப்படத்தின் சில காட்சிகளை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் பெயர் போடும் போதே கேமரா ஒரு ஜாதகத்தை சில நிமிடம் காட்டுகின்றது. அது யாருடைய ஜாதகம் என்று பார்த்தால்...அது ரஜினியுடையது மாதிரியே இருந்தது. அவருடைய உண்மையான ஜாதகத்திலும் படத்திலும்...சிம்ம லக்னம்...கன்னியில் கேது மற்றும் சனி பகவான். மற்றவற்றை சரியாக கவனிக்க முடியவில்லை.

அவருக்கு ஆன்மீக  ஈடுபாடு ஏற்பட  காரணமாய் நான் நினைக்கும் சில காரணங்களை தந்துள்ளேன்.



௧. தியான வீடான  ஐந்தாம் வீட்டு அதிபதியான குருபகவான்  ஏழில்  இருந்து லக்னத்தை பார்க்கிறார்.இதனால் அவருக்கு தியானத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

௨. தியானத்திற்கு அதிபதியான குருபகவான் ராகுபகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார், ராகுவோ குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஆதலால் இங்கே ராகுவானவர் குருவின் பலனை கொடுப்பார். அந்த விதத்தில் பார்த்தல் தியான அதிபதி சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்ததாக கொள்ள வேண்டும். இப்படி பார்க்கும் பொழுது அவருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படிருக்க வாய்ப்புகள் உண்டு. ராகுவின் உப நட்சதிராதிபதி குரு என்பது இன்னும் ஒரு முக்கிய காரணம்.

 ௩. குண்டலினி காரகனான கேதுபகவானின் உப நட்சத்திராதிபதியும்  குரு பகவானே.

௪. அதுமட்டுமல்ல ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்  ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகளின் உப நட்சதிராதிபதியும்  தியான வீட்டு அதிபதி குருபகவானே.


மேற்கூறிய காரணங்களால் அவருக்கு  ஆன்மீக ஈடுபாடு மட்டும் அல்ல அவருக்கு ஆன்மீக அனுபவமும்  ஏற்ப்பட்டிருக்க  வாய்ப்புகள் உண்டு.
 ஆன்மீக ஜோதிடம் சம்பந்தமான முந்தைய பதிவுகளுக்கான சுட்டி என்கிற வழிகாட்டி கீழே:

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்...



புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

Related Posts Plugin for WordPress, Blogger...