வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 12 மார்ச், 2013

ஈழப்பிரச்சனையில் இந்தியாவிற்கு என்ன தண்டனை? இனி போராட்டம் எப்படி இருக்க வேண்டும்?



 இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை  என்றே நான் கூறுவேன். இந்தியா  நடந்த போரில் இலங்கைக்கு உதவியது என்பது உண்மையானால் இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் போர்க் குற்றத்திற்கான  தண்டனையை பெற வேண்டும் அல்லவா? அதுதானே முறை?

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு  அதிக தண்டனை என்று கூறுவார்கள் அப்படி பார்க்கையில் இந்தியாவிற்கும்தானே தண்டனை தரவேண்டும்?

உண்மையில் இந்தியாவிற்கு தண்டனை தரவேண்டும். ஆனால் இந்தியா என்ன தவறு செய்தது? நாட்டு மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தவறை செய்ததெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள் செய்தது.  

எனவே இந்தியாவிற்கு தண்டனை என நான் கூறுவது அப்பொழுது ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

இந்த கருத்தை வழிமொழிய தமிழகத்தில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்காவது துணிவுண்டா?

இலங்கையை குற்றம் சொல்லும் அரசியல்கட்சிகள் ஏன் இந்திய தலைவர்களை குற்றம் சொல்ல தயங்குகின்றன? 

போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும்.  அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம். 

மனிதத்திற்கு முன்பு நாடோ,மொழியோ,இனமோ எதுவும் முக்கியமல்ல. மனிதகுலத்திற்கு எது  நல்லதோ அது மட்டுமே முக்கியம்.

என்னைப் பொருத்தவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதேபோல இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கும் தண்டனை தரவேண்டும். அதுமட்டுமா தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடிய தலைவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும் அல்லவா?

இந்த தண்டனையை வேறொரு அமைப்பு தரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் மறுபுறம் மக்களான  நாமே இத்தண்டனையை தரவேண்டும்.  அரசியலில் உள்ளவர்களை அரசியலில் தனிமைப்படுத்தவேண்டும்.....அவர்கள் தவறை உணர்ந்து கதறி அழும் வரை....பிராயச்சித்தம் தேடும்வரை.

முதலில் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தர முயல்வோம். 

சரி இப்பொழுது என்ன செய்யலாம்?
மாணவர்கள் போராட்டம் சூடுபிடித்து விட்டது. உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமாக இருக்கவேண்டுமே  ஒழிய சாகும்வரை உண்ணாவிரதம் என்பது ஏற்ப்புடையதல்ல.  அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் தமிழகத்தில் இருக்க கூடாது. டெல்லியில் பாராளுமன்றத்திற்கு  முன்பு இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் பொழுது அது ஒட்டுமொத்த இந்தியாவையும் சென்றடையும். 

காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உடந்தையாய் இருந்திருந்தாலும்  ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டுக்கு,கேள்விக்கு பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி அழுத்தத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இது நடக்க  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்மால் முடிந்தவரை விரைவில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும். அனைத்து ஊடகங்களின் உதவியை நாடுங்கள்.....உங்களை தேடிவரும்படி செய்யுங்கள். 

எனவே மாணவர்களே உங்களுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற அக்கறை இருந்தால் பாராளுமன்றத்திற்கு முன்பும்,ஐநா சபை முன்பும், ஒவ்வொரு நாட்டு தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்துங்கள்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை தரவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு சம உரிமை,நல்வாழ்வு கிடைக்க துரிதமாக நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று போராடுங்கள். விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள். இதுவே எனக்கு தோன்றும் சிறு எண்ணம்.....சிந்தித்து செயல்படுங்கள்.....உங்கள் கருத்தையும் கூறுங்கள்.....

மாணவர்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்றும்  அல்ல பொதுமக்களும் போராடலாம். எங்கோ நடந்ததற்கு இங்கு ஏன் போராடாவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், இனி எங்கும் இதுபோல் நடக்ககூடாது என்பதை புரியவைக்க வேண்டும் எனபதை மனதில் வையுங்கள்.  போராட  அனைவரும் சாலையில் இறங்க வேண்டுமென்பது அல்ல...உங்களது கருத்தை முடிந்தவரை முடிந்த இடங்களில் பதிவு செய்யுங்கள்....இப்பிரச்சனையை உங்களால் முடிந்த சில பேருக்காவது கொண்டு சொல்ல முயலுங்கள்.

  சரி நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் இந்த பதிவை எழுதுவது மட்டுமே என்னால் இப்பொழுது இரவு இரண்டு மணிக்கு முடிந்தது....

நாம் போராடுவது இன்று  தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி  மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள். 

என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

14 கருத்துகள்:

  1. நண்பர் புரட்சிமணி,
    மனிதம் என்று சொல்லி கொண்டு தமிழ் மொழி தமிழ் என்ற வட்டத்திற்குள்ளேயே நீங்க இன்னும் நிற்பது மாதிரி தெரியுது.நாடு என்ற பெரிய வட்டத்திற்குள் வருவது நல்லதல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு என்னும் பெரிய வட்டமா?
      அது பெரிய குழி.
      பல இனங்களின் மக்களை ஏய்த்து, இன மொழியை அழித்து,உரிமைகளைப் பறித்து, கொள்ளையடிப்பதற்காக உள்ள சிறைச்சாலை.
      நேத்துகூட ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் இனி தமிழ் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.
      இனியும் ஏமாற மாட்டோம்.
      எம் தேசம் தமிழ்த்தேசம்.

      நீக்கு
    2. வாங்க வேகநரி நண்பா,
      //நாம் போராடுவது இன்று தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள். //

      //போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும். அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம். //

      //
      நாட்டால்,இனத்தால்,மதத்தால்,ஜாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும்.//

      என்னுடைய கருத்தை முழுத்வதுமாய் பாருங்கள்....மொழி,நாடு என்ற வட்டத்தை தாண்டி நாம் பயணிக்க வேண்டும் என்றே கூறியுள்ளேன். நீங்கள் நாடு என்னும் வட்டத்திற்குள் என்னை அழைக்கிறீர்கள் நான் அதையும் கடந்து செல்லவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

      பின்பு ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் அல்லவா...அதற்க்கு சிலர் போராடும்பொழுது அதில் நாமும் பங்கெடுப்பதில் என்ன தவறு நண்பா? போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை அப்படியே விட்டுவிட முடியுமா நண்பா? சிந்தித்து சொல்லுங்கள்....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. நல்ல கேள்வி. இந்தியாவையும் எதிர்க்க வேண்டும். தண்டிக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழ்நிலை இன்னும் அமைய வில்லை. பொறுமையாக பண்ணுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி குருநாதன்

      நீக்கு
  3. //நேத்துகூட ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் இனி தமிழ் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.//

    இது என்ன கிறுக்குத்தனம்....இது பற்றி யாரும் பேசிய மாதிரி தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பேசுவோம், பிற இனங்களின் மொழிகளைப் புறக்கணித்து, ஒடுக்க நினைக்கும் இந்திய ஆதிக்கத்தின் நரித்தனத்தை முறியடிப்போம். http://rsgurunathan.blogspot.in/2013/03/blog-post_12.html

      நீக்கு
    2. இது ஒரு முட்டாள் தனமான முடிவாக தெரிகிறது....இது விரைவில் கைவிடப்படவேண்டும்....கைவிடவைக்கவேண்டும்...அதற்க்கு முன்பு இதுபற்றி அரசானை இருந்தால் கொடுங்கள்....ஏன் எதற்க்காக இந்த முடிவு என்பதை அறிய விரும்புகிறேன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு.

    என்னைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் தமிழகத் தமிழர்கள் சரியாக ஒரே திசையில் போராடியதே இல்லை.

    ஒரு பிரச்சினையை தீர்க்க அதன் உண்மை சூழல் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஈழத்தில் வாழும் தமிழர் நிலையை,இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்தப்படுவதை,அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை சுரண்டப்படுவதை உலகுக்கு சான்றுகளுடன் புரிய வைக்க வேண்டும்.

    அயல்நாட்டுப் பிரச்சினை என்பதால் இராஜதந்திரமே பலன் தரும். அந்த வகையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஜெனிவா தீர்மானம் வெற்றி பெற்று ,ஈழ தமிழர்களின் நிலை என்ன என்பதை வெளிக்கொண்டு வரும் முயற்சி முன் எடுக்கப்பட வேண்டும்.

    இதுதான் எதார்த்த‌ம்,நடக்கும் வாய்ப்புள்ள செயல்.

    இதற்கு தமிழக ,மத்திய அரசுகள் மீது தமிழர்கள் ஒரே குரலாய் அழுத்தம் கொடுக்க வேண்டும்.ஆளும் தமிழக் அரசு த்னது நிலைப்பாட்டினை அறிவித்து,சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    தீர்மானம் வெற்றி பெற்றால் நாடு கடந்த தமிழீழ அரசை ஐ,நா,இந்தியா அங்கீகரிக்க அடுத்த கட்ட போராட்டம் நடத்த‌லாம்.

    இதை விட்டு, உடனே வேறு ஐ.நா தீர்மானம்,யார் துரோகி, உடனடித் தீர்வு,இந்தியா தமிழகத்தை ஒதுக்குகிறது என்பது ஈழப் பிரச்சினையை நீர்த்து பொக செய்யும் பிரச்சினைகள்.

    ஐ.நா தீர்மானம் என்பது விளையாட்டு அல்ல.

    ஜெனிவா தீர்மான முடிவுக்குப் பின் இந்த குரல்கள் மாறி விடும் என தெரியும் என்றாலும், ஏன் இன்னும் வரலாற்றுத் தவறுகளில் இருந்து தமிழர்கள் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனப் புரியவில்லை.

    எதிரி மிகத் தெளிவாக இருக்கிறான்!!!!!!!

    இராஜபக்சேவின் இப்போதைய ஒரே நோக்கம், ஜெனிவா தீர்மானம் வேண்டாம்.

    நம் நோக்கம்????

    நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தோழர் சார்வாகன்,
      வழக்கம்போல கருத்தாழம் உள்ள ஒரு குட்டிப்பதிவு உங்கள் பின்னூட்டம்.

      //தீர்மானம் வெற்றி பெற்றால் நாடு கடந்த தமிழீழ அரசை ஐ,நா,இந்தியா அங்கீகரிக்க அடுத்த கட்ட போராட்டம் நடத்த‌லாம்.//
      இதனால் என்ன பயன் சகோ? எனக்கு புரியவில்லை.

      //இராஜபக்சேவின் இப்போதைய ஒரே நோக்கம், ஜெனிவா தீர்மானம் வேண்டாம்.

      நம் நோக்கம்????//

      சந்தேகமென்ன தீர்மானம் வெற்றிபெற வேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே

      நீக்கு
  5. இந்திய நாட்டில் [சென்னை, தமிழ்நாடு]இருந்துகொண்டுதான் இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள்.

    உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.

    இப்போதைக்கு நம்மால் முடிந்தது பதிவிடுவது மட்டும்தான்.

    இனியும் இது தொடர்பாக எழுதும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

    எட்டப்பர்கள் நிறைந்த இனமல்லவா நம் இனம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பசி பரமசிவம்,
      //இனியும் இது தொடர்பாக எழுதும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
      எட்டப்பர்கள் நிறைந்த இனமல்லவா நம் இனம்?! //
      நான் ஒளிந்துகொண்டு எழுதவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் நெஞ்சுரம் இறைவனின் அருளால் எனக்குண்டு.
      அதேநேரத்தில்,தாங்கள் என்மீது காட்டும் அக்கறைய நான் மதிக்கிறேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Suhir Loga,
      எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம் அதுவும் அரைகுறையாக.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...